உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா என்ற கொடிய நோய்க்கு கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளை மக்களுக்கு பயன் படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் முன்கள பணியாளர்களான சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஒரு சென்டரில் 100 பேர் வீதம் தினம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. யாரையும் வற்புறுத்த வேண்டாம் எனவும் தாமாக முன்வருபவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போட்டால் போதும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசிக்கு எதிராக சிலர் வதந்தி பரப்பியும் வருகின்றனர். இந்த நிலையில் நம் அண்டை நாடுகளான மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர், சீசெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு உதவி செய்யும் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி வழங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில், “சர்வதேச சமூகத்திற்கான சுகாதார தேவைக்கு நம்பகமான நட்பு நாடாக இருப்பதற்கு இந்தியா பெருமைப்படுகிறது. சில நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி நாளை தொடங்குகிறது. வரும் நாட்களில் மேலும் சில நாடுகளுக்கும் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்