நியூசிலாந்து நாட்டில் தொழிலாளர் கட்சி 2020-ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனையடுத்து அக்கட்சியை சேர்ந்த ஜெசிந்தா ஆர்டென் 2-வது முறையாக பிரதமரானார். மிக இளம் வயதில் பிரதமரானவர் என்ற பெருமையை பெற்றவர். கடந்த சில நாட்களுக்கு ஜெசிந்தா முன் வெளியிட்ட அறிவிப்பில், வரும் பிப்ரவரி 7-ந்தேதி பிரதமர் பதவியில் இருந்து விலகுகிறேன் என திடீரென அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இதனையடுத்து, அக்கட்சியை சேர்ந்த கிறிஸ் ஹிப்கின்ஸ் புதிய பிரதமராக பொறுப்பேற்பார் என தகவல்கள் வெளிவந்தன. இதன்படி, இன்று காலை அவர் பதவியேற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு, பிரதமராக பதவி வகித்து வந்த ஆர்டென், அரசு இல்லத்திற்கு சென்று முறைப்படி தனது ஆட்சி, அதிகாரம் உள்ளிட்டவற்றை ஒப்படைத்து, பதவி விலகல் கடிதமும் அளித்து உள்ளார்.
இதன்பின், புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ள ஹிப்கின்ஸ் மற்றும் துணை பிரதமர் கார்மெல் செபுலோனி ஆகியோர் அந்நாட்டு நேரப்படி காலை 11.20 மணியளவில் வருகை தந்தனர். கிறிஸ் ஹிப்கின்ஸ் முறைப்படி 41-வது பிரதமராக இன்று காலை பதவியேற்று கொண்டார்.
அதன்பின் அவர் கூறும்போது, தனது அமைச்சரவையில், பணவீக்க பெருந்தொற்று விசயங்களை எதிர்கொள்வதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என சூசகமுடன் கூறினார். கடந்த 2008-ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹிப்கின்ஸ், 2020-ம் ஆண்டு நவம்பரில் கொரோனா தடுப்புக்கான மந்திரியாக நியமனம் செய்யப்பட்டார். அவர் காவல், கல்வி மற்றும் பொது சேவை ஆகிய துறைகளின் மந்திரியாகவும் பதவி வகித்து உள்ளார்.