நம்மூரில் மழை காலங்களில் இடியுடன், மின்னலும் தோன்றி வானை பிரகாசமடைய செய்யும். வானில் தோன்ற கூடிய மின்னலானது அதிக மின்னழுத்தம் கொண்டது. அது மேகத்திற்கும், தரை பகுதிக்கும் இடையே, மேகங்களுக்கு உள்ளேயோ அல்லது மேகங்களுக்கு இடையிலோ மின்சாரம் வெளிப்படுத்த கூடியது
. இதனால், பல இன்னல்களும் ஏற்படுகின்றன. மழை பெய்யும்போது, மரங்களுக்கு கீழே ஒதுங்க கூடாது என முன்னோர்கள் கூறி வைத்து உள்ளனர். ஏனெனில் இந்த மின்னல் தாக்கும்போது, மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு ஏற்படுத்தும். ஆண்டுதோறும், இந்த மின்னலால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பதுடன், கட்டிடங்கள், தொலைதொடர்பு சாதனங்கள், மின் இணைப்புகள் மற்றும் மின்சாதனங்களில் பாதிப்பு ஏற்படுத்தி கோடிக்கணக்கான மதிப்பிலான பணம் வீணாகிறது.
இதனை தடுப்பதற்கான மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைக்கான புதிய முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். விஞ்ஞானி பெஞ்சமின் பிராங்ளின் என்பவர் 1752-ம் ஆண்டு மின்னல் மற்றும் மின்சாரத்திற்கு இடையேயான தொடர்பு பற்றி விளக்கினார். இதன் அடிப்படையில் விஞ்ஞானிகள் மின்னலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த முறை லேசர் உதவியுடன் அதனை முயன்று பார்த்து உள்ளனர். இதில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சுவிட்சர்லாந்து நாட்டின் வடகிழக்கில் அமைந்த சாண்டிஸ் மலை பகுதியின் உச்சியில் இருந்து மின்னலின் பாதையை மாற்றியமைத்து அதில் வெற்றி பெற்றுள்ளனர்.