பசுவை கோமாதா என்று அழைக்கும் நாம் அதற்கு உணவாக வாழைப்பழம், அகத்திக்கீரை அளிப்பதே நம் வாழ்வில் பலவற்றுக்கும் பரிகாரமாக சொல்லப்படுகிறது. கேட்டதைக் கொடுக்கும் காமதேனு என அழைக்கப்படும் பசுவானது ஆன்மீகவாதிகளால் மூன்று உலகிற்கும் தாயாக கருதப்படுகிறது. பசுவுக்கு தினமும் பூஜை செய்வது வழிபடுவது என்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமம்.
பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், 48 ஆயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், நவக்கிரகங்களும் வீற்றிருந்து ஆட்சி செய்கின்றனர் என்பது ஐதீகம். நாள் தோறும் பசுவை 108 போற்றி சொல்லி வழிபட்டால் பல புராதனக் கோவில்களுக்கு சென்று வந்த பலன் எல்லாம் நமக்கு கிடைக்குமாம். வீட்டில் பசு வளர்ப்பு என்பது செல்வ செழிப்பை உண்டாக்கும் ஒரு செயல் என போற்றப்படுகிறது
பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த விலங்கு என்றால் அது பசுதான். எனவே தான் அவரை கோபால கிருஷ்ணன் எனவும் ஒரு பெயரில் அழைப்பார்கள்.கோ பூஜை நடத்தும் போது கண்டிப்பாக பசுவுடன் அதன் கன்றும் இருக்க வேண்டும்.கோ பூஜை செய்வதால் பணக் கஷ்டம் நீங்கும். சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் ஆகியவற்றின் போது பசு தானம் செய்தால் கோடி புண்ணியம் நம்மை வந்து சேருமாம். ஒரு பசு தன்னுடைய முதல் கன்றை பிரசவிக்கும்போது அதனை “தேனு” என்பார்கள். 2வது கன்றை பிரசவித்ததும் அந்த பசுவை “கோ” என்பார்கள். இரண்டாவது கன்றை பிரசவித்த பசுவைதான் “கோ பூஜை”க்கு பயன்படுத்துவார்கள்.
பசுவின் வாய் பகுதியில் கலி தேவதை வீற்றிருப்பதால் தான் பசுவின் பின்பகுதியை தொட்டு வணங்கும் முறையானது தற்போது வரையிலும் வழக்கத்தில் இருந்து வருகிறது. பசுக்களை அடிக்கடி நீர் நிலைகளில் நீந்தி குளிக்க வைப்பது மிகவும் நல்லது.