பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் தாயார் கரீமா பேகம் (73) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ள இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் இந்திய திரை உலகம் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமானவர்.
முடிவெடுப்பதில் மிகவும் திறமையானவரான அவரது தாயார் ரகுமானுக்கு இசை மீது இருந்த ஆர்வத்தையும் அவரது உழைப்பையும் பார்த்துவிட்டு, அவரை இசை துறையை தேர்வு செய்ய சொன்னதாக ரகுமான் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். ”என்னை பள்ளிப்படிப்பை விட்டு விட்டு இசையை தேர்வு செய்ய சொன்வர் அம்மா தான். இசை தான் எனக்கான துறை என்பது அவரது உறுதியான நம்பிக்கையாக இருந்ததாக” ஏ ஆர் ரகுமான் கூறியிருந்தார்.
தாய் மீது மிகவும் பாசமாக இருக்கும் ஏ ஆர் ரகுமான், எல்லா மேடைகளிலும் அவரது தாயாரை நினைவு கொள்ள தவரமாட்டார். 9 வயதில் ரகுமானின் தந்தை ஆர் கே சேகர் காலமான பின்னர் அவரை வளர்த்து மிகப்பெரிய இசை கலைஞனாக்கியது அவரது தாயார் கரீமா பேகம் தான்.
வயது மூப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த ஏ ஆர் ரகுமானின் தாயார் காலமானதை அறிந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தனது இரங்கல் செய்தியை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இசை ஜாம்பவான் ஏ ஆர் ரகுமானின் தாயார் உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்த செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்ததாகவும், ரகுமான் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் முதல்வர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். எதிர் கட்சி தலைவர் மு க ஸ்டாலின், மற்றும் பல திரை உலக பிரபலங்களும் தங்கள் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.