கர்நாடக தேர்தலை நாடாளுமன்ற தேர்தல் முன்னோட்டமாக கருத முடியாது எனவும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு சென்று விட்டதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மீது கர்நாடக மக்கள் வைத்திருக்கும் அன்பு எள்ளளவும் கூட குறையவில்லை. அதை 2024 ஆம் ஆண்டு தேர்தலில் நாம் பார்ப்போம். கர்நாடகாவில் பாஜக கடந்து வந்த பாதை கடினமான ஒன்று. கர்நாடகாவில் பாஜக இதுவரை தனியாக மெஜாரிட்டியாக அமைத்த வரலாறு இல்லை.
கர்நாடகாவில் 38 ஆண்டுகளாக ஆளும் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததாக வரலாறு இல்லை. இதை பாஜக உடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. தேர்தலை பொறுத்தவரை மக்கள் பல விஷயங்களை பார்ப்பார்கள். அனைத்தையும் பார்த்து இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். பாஜகவிற்கு வாக்கு வங்கி குறையவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு ஜேடிஎஸ் கட்சியின் 4.5 சதவீத வாக்குகள் போயிருக்கிறது. இதனால், காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவிகிதம் அதிகரித்து விட்டது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் 28 தொகுதிகளில் 26 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும். அந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் கட்சி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அக்கட்சிக்கு பல சவால்கள் ஆரம்பித்து உள்ளது. தேர்தலில் ஜெயிப்பது தோற்பது எல்லாம் சகஜம். பிரதமர் மோடி மீது மக்களுக்கு அன்பு இருக்கிறது. அதனால்தான் பெங்களூரில் 16 எம்.எல்.ஏக்களை பாஜக வென்றுள்ளது. பெங்களூரு மக்கள், மோடியின் ரோட்ஷோவிற்கு கொடுத்த வெகுமதியாக இதை பார்க்கிறேன்.
கர்நாடக சட்டப்பேரவையில் எந்த கட்சி தோற்குதோ அது லோக்சபாவில் ஜெயிக்கும். இது 40 ஆண்டுகளாக கர்நாடகாவில் இருக்கும் சீக்ரெட். எனவே கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி இங்கே ஆட்சி அமைத்தது என்றால் பாஜக மேலே ஆட்சி அமைக்கும். 2013 தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வென்று மோடி பிரதமர் ஆனார். 2018-ல் ஜேடிஸ் – காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. திரும்ப பாஜக ஆட்சி அமைத்தது. எனவே ஒரு விதத்தில் இது நல்லதுதான். இங்கே ஆட்சி அமைந்தால் அங்கே ஆட்சி அமையாது என்று இருக்கு… எனவே கர்நாடக தேர்தல் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இவ்வாறு அவர் கூறினார்.