தமிழ்நாட்டில் மது விற்பனை உயர்ந்திருப்பது கேவலத்திலும் கேவலமான ஒன்று என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
மது விற்பனை உயர்ந்திருப்பதாக அமைச்சர் கூறுகிறார் என்றால் இதை விட வேறு அவமானம் இருக்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் பாமக 2.0 விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை அது வட தமிழக கட்சி என்ற பிம்பம் ஒன்று உள்ளது. அந்த பிம்பத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அன்புமணி ராமதாஸ், தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு அடிக்கடி விசிட் அடிக்க ஆரம்பித்துள்ளார். விருதுநகர், நெல்லை, கோவை, என ஏற்கனவே ஒரு ரவுண்டு சென்ற அன்புமணி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கும் நேற்று விசிட் அடித்தார்.
அந்த வகையில் திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், மது விவகாரத்தை வைத்து திமுக அரசு மீது அட்டாக் செய்தார்.
திமுக அரசு சாராய கடைகளை திறந்து விட்டு நல்லா குடிங்க என மக்களை ஊக்கப்படுத்துவதாகவும் தங்களுக்கு தேவை வருமானம் மட்டுமே என எண்ணுவதாகவும் அன்புமணி விமர்சித்தார்.
கடந்த ஆண்டு மதுவிற்பனை 36 ஆயிரம் கோடி என்றும் இந்தாண்டு மது விற்பனை 45 ஆயிரம் கோடி எனவும் குறிப்பிட்ட அன்புமணி, மதுவால் கிடைக்கும் வருமானம் தமிழ்நாட்டிற்கு பெரிய அவமானம் என சாடினார். மதுவிலக்கு விவகாரத்தில் திமுக நிறுவனர் அண்ணாவின் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் ஏன் பின்பற்றவில்லை என்ற கேள்வியையும் எழுப்பினார்.