நடிகர் விஜய்க்கு ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை எப்போதுமே அதிமுக மீது ஒரு சாப்ட் கார்னர் உண்டு. இன்னும் சொல்லப் போனால் 2011 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா ஊர், ஊராகப் போய் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து பிரச்சாரம் செய்தார். அப்போது விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளும் கூட அதிமுகவுக்கு ஆதரவாக கொடிபிடித்து நின்றனர்.
வேலாயுதம் திரைப்பட வெளியீட்டில் சிக்கல் வந்தபோதும் ஜெயலலிதாவைப் போய் சந்தித்தார் விஜய். இப்படி விஜய் அதிமுகவை எப்போதுமே பகைத்துக் கொண்டது இல்லை. அதேநேரம் மெர்சல் திரைப்படத்தின் போது பாஜக தரப்பு விஜய்க்கு கடும் அழுத்தம் கொடுத்தது. அப்போது கூட தான் வெளியிட்ட அறிக்கையில்ம் ‘ஜோசப் விஜய்’ என்றே பெயர் போட்டிருந்தார். காரணம் விஜய்க்கு மதம் கடந்து அனைத்து தரப்பிலும் ரசிகர்கள் இருப்பதை அவர் அத்தனை ஆழமாக உள்வாங்கியிருந்தார். கூடவே விஜயை அவர் ரசிகர்கள் அண்ணனாகவும், தம்பியாகவும், தோழனாகவும் தான் பார்ப்பதை அவர் மற்ற எவரையும் விட ஆழமாக புரிந்து இருந்தார்.
ஒருபக்கம் முன்னணி நடிகராக இருந்தாலும், இன்னொரு பக்கம் இளைய தளபதி விஜயிடம் எப்போதுமே சமூகப்பொறுப்பும் மிக அதிகம். ஸ்டெர்லைட்டில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்து உயிர் இழந்தவர்களின் இல்லத்துக்கே போய் ஆறுதல் சொன்னார் விஜய். அதிலும் ஒரு இரவில்..யாருக்கும் தெரியாமல் தன் ரசிகர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் பின் சீட்டில் அமர்ந்து போய்வந்தார். இதோ இப்போதுகூட விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக தலைஎநகர் டெல்லியில் பதிவு செய்தார். உண்மையில் விஜய் அரசியலுக்கு வந்திருந்தால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என இருதலைமுறைகளாக ரசிக மனநிலையிலேயே இயங்கிக் கொண்டிருக்கும் அதிமுகவுக்கே அது சேதாரமாகி இருக்கும். ஆனால் விஜய் தன் தந்தையையே ஒதுக்கிவைத்தார். திரையில் கோலோச்ச இன்னும் வயது இருக்கிறது..ரசிக்கக் கூட்டமும் இருக்கிறது என்பதும் இதில் ஒரு கணிப்பாக இருக்கக்கூடும்.
ஐ.டி.ரெய்டின் போதும், மெர்சல் திரைப்பட சர்ச்சையின் போதும் விஜயை பாஜக கடுமையான முறையில் தாக்கியது. ஆனால் விஜய் மெளனித்தே இருந்தார். அவர் எப்போதுமே அதிமுகவுக்கு எதிர்துருவத்தில் நின்றதில்லை. காற்றில் ஊழல் நடப்பதாக 2 ஜி ஊழலை பற்றி தன் படங்களில் வசனம் வைத்திருக்கும் விஜய் அதிமுகவை நேரடியாக இதுவரை விமர்சித்தது இல்லை. சர்க்கார் திரைப்படத்தில் இலவசங்களை குறிப்பாக மிக்ஸி, கிரைண்டரை மக்கள் உடைப்பதுபோல் ஒரு காட்சி வரும். ஆனால் இலவசம் கொடுப்பதை அதிமுக மட்டும் செய்ய்வில்லை. முந்தைய திமுக ஆட்சியிலேயே கருணாநிதி வீடுதோறும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியைத் தந்தார்.
இதோ இப்போது விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஒரு கோரிக்கை வைத்தார். அதில் மிக முக்கியமாக திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று இருந்தது. ஆனால் முதல்வர் நேற்று வெளியிட்ட ஊரடங்கு தளர்வு நடைமுறைகளில் வழக்கம் போல் திரையரங்குகள் 50 சதவிகித இருக்கையோடே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இளைய தளபதி விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. முதல் ஒரு வார கலெக்சனில் தான் போட்ட பணம் திரும்ப கிடைக்கும். இதனால் அந்த வாரத்தில் நூறுசதவிகித இருக்கைகள் நிரம்பாவிட்டால் அதற்குள் இணையத்தில் படம் கசிந்துவிடும் என்பதால் தான் இப்போதெல்லாம் அதிக திரையரங்குகள், அதிக காட்சிகள் என்னும் நிலைக்கு திரைத்துறை சென்றுவிட்டது. இப்படியான சூழலில், விஜயின் மாஸ்டருக்குப் பின் வரிசையாக ரிலீஸ் செய்யலாம் என டஜன் கணக்கில் படங்கள் காத்திருக்கின்றன. ஆனால் விஜயின் கோரிக்கையை நிராகரித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
ஒருவேளை விஜயின் கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றிருந்தால் தேர்தல் நெருக்கத்தில் விஜயை வாய்ஸ் கொடுக்கவும் கூட வைத்திருக்க முயற்சித்து இருக்கலாம். ஆனால் அந்த கோரிக்கையை ஏற்று 100 சதவிகித இருக்கையோடு அனுமதித்து அதனால் கொரோனா பரவினால் வாழ்நாள் முழுதும் பெரும் களங்கத்தை சுமக்க வேண்டும் என்பதையும் எடப்பாடி பழனிச்சாமி உணர்ந்துதான் நிராகரித்திருக்கிறார் என்கின்றனர் ஆளும்கட்சி வட்டத்தினர்.