பால் மற்றும் பால் பொருட்கள் விலையை தொடர்ச்சியாக உயர்த்திய தமிழ்நாடு அரசு, பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்’ என்ற உற்பத்தியாளர்கள் கோரிக்கைக்கு மட்டும் செவி சாய்க்காமல் இருப்பது ஏன் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு, பேச்சுவார்த்தை மூலம் சுமூக உடன்படிக்கை ஏற்படுத்த வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இன்று முதல் பால் நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி ஆவினுக்கு பால் வழங்கப் போவதில்லை என உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளதால் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் வாழப்பாடி ராஜேந்திரன் கூறுகையில், தமிழ்நாட்டில் உள்ள 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆவினுக்கு நாள் ஒன்றுக்கு 27.5 லட்சம் லிட்டர் பால் அனுப்பப்படுகிறது.
பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.42-ம், எருமைப்பாலுக்கு ரூ.51-ம் வழங்கும்படி கேட்டிருந்தோம். ஆனால், அரசு எங்கள் கோரிக்கை மீது எந்த தீர்வும் காணவில்லை. எனவே, இன்று முதல் ஆவின் நிறுவனத்துக்கு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக முதல் பால் அனுப்பமாட்டோம். ஒரு கட்டத்தில் ஆவினுக்கு பால் கொள்முதல் முற்றிலும் தடைபடும். அரசு தீர்வு காணவில்லை என்றால், எங்கள் பாலை தனியார் நிறுவனத்துக்கு மடைமாற்றிவிடுவோம். தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே உள்ள விலையில் 10 ரூபாய் கூடுதலாக கொடுத்து பாலை கொள்முதல் செய்துகொள்ள தயாராக இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
பால் உற்பத்தியாளர்கள், ‘ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்க மாட்டோம்’ என்று போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால் ஆவின் நிறுவன பால் நுகர்வோர்களுக்கு, பத்து லட்சம் லிட்டர் அளவில், ஆவின் பால் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. உடனடியாக தமிழக அரசு இதில் தலையிட்டு, பேச்சுவார்த்தை மூலம் சுமூக உடன்படிக்கை ஏற்படுத்த வேண்டும் என தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.