தமிழகத்தில் நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 600 கோடி இடுபொருள் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும், இந்த நிவாரணத் தொகையானது வரும் 7 ஆம் தேதி முதல் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவுவைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த முதல்வரின் அறிக்கையில், ‘புயல்பாதிப்புகளை மத்திய அரசின் குழுவினர் ஆய்வு செய்தனர். நிவர் புயல் பாதிப்புகளை சீர்செய்ய 3750.38 கோடி தேவை என மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. புரெவி புயல் பாதிப்பை சீர்செய்ய 3750.38 கோடி தேவை எனவும் தெரிவிக்கப்பட்டது. புரெவி புயல் சேதங்களை சீர்செய்ய ரூபாய் 1514 கோடி தேவை எனவும் மதிப்பிடப்பட்டது. புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனைக் காக்கும்வகையில் இடுபொருள் நிவாரணத்தொகை உயர்த்தப்படுகிறது. மானாவரி மற்றும் நீர்பாசன வசதிபெற்ற நெற்பயிர்களுக்கும், நீர்ப்பாசன வசதிபெற்ற இதரபயிர்களுக்கும் ஹெக்டேருக்கு இடுபொருள் நிவாரணத்தொகையாக ரூபாய் 13,500 வீதம் வழங்கப்படுகிறது. இந்த தொகை 20 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. அனைத்து மானாவரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேருக்கு ரூபாய் 7410 அளிக்கப்படுகிறது. இந்தத் தொகை பத்தாயிரம் ரூபாய் ஆக உயர்த்தப்படுகிறது.
இதேபோல் பல்லாண்டுகால பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேருக்கு 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகையானது 25 ஆயிரம் ஆக அதிகரிக்கப்படுகிறது. உயர்த்தப்பட்ட இடுபொருள் நிவாரணத் தொகையை தமிழக அரசே வழங்கும். இந்த நிவாரணம் விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் வரும் 7 ஆம் தேதி முதல் நேரடியாக வரவுவைக்கப்படும்.’எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கிறார்.