சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் வசித்து வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அதனை தொடர்ந்து ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார் சட்டசபையிலும் இதற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டும் இருந்தது.
இதனையடுத்து ஜெயலலிதா வசித்த இல்லத்தை நினைவிடம் ஆக்குவதற்கான வேலைகளை அரசு மேற்கொண்டது. இதனை அடுத்து போயஸ் தோட்டம் அமைத்து இருக்கும் நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக ரூபாய் 60 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையை அரசு கோர்ட்டில் செலுத்தியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் நினைவிடம் அமைக்க அனுமதி கொடுத்தது. இதனையடுத்து நினைவு இல்லமாக மாற்றி அதை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விட தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை வருகிற 28-ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க இருக்கின்றார். ஜனவரி 28ஆம் தேதி காலை நடைபெறும் திறப்பு விழாவிற்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கின்றார். முன்னதாகவே இல்லத்தில் ஜெயலலிதா படித்த புத்தகங்கள் பயன்படுத்திய பொருட்கள் காட்சி இடம்பெறும் என்றும் நினைவு இல்லம் பின்னர் பொதுமக்களும் பார்வையிட அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.