ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் டெப்பாசிட் செய்யப்படும். ஆனால் ஒரே தவணையில் இல்லை என மத்திய அமைச்சர் தகவல்
2014 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக களம் கண்ட நரேந்திர மோடி தனது பிரச்சாரத்தின் போது கருப்பு பண விவகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை முன்னிலைப்படுத்தி பேசி வந்தார். தான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்பு பணம் இந்தியாவுக்கே திரும்ப கொண்டு வரப்படும் என்று அவர் உறுதியளித்திருந்தார். இது தொடர்பாக சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2 கோடி வேலைவாய்புகளை உறுவாக்குவேன் என்றும் கருப்பு பணத்தை திரும்ப கொண்டு வந்து ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் டெப்பாஸிட் செய்வேன் என்றும் பிரதமர் நாட்டு மக்களுக்கு கொடுத்த இரண்டு வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டார் என கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே நாட்டு மக்கள் அனைவரின் வங்கி கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் டெப்பாசிட் செய்யப்படும். ஆனால் ஒரே தவனையாக இல்லை, மெதுவாக செய்யப்படும் என கூறினார்.
அரசிடம் அதிகமாக பணம் இல்லாத காரணத்தால் நாங்கள் இந்திய ரிசர்வு வங்கியிடம் கேட்டிருந்தோம். ஆனால் அவர்கள் தர மறுக்கிறார்கள். ஆமாம், ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டிருந்தது தான் ஆனால் அதில் சில தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளன, என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே மகாராஷ்டிரா மாநிலத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார்.
வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வரப்படும் என பிரதமர் அளித்த வாக்குறுதி குறித்தான செய்தியாளர்களின் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே இவ்வாறு தெரிவித்தார்.