மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து தவறான தகவல்களை சிலர் பரப்பி வருவதாகவும். ஆத்திரமூட்டும் வாசகங்களை பதிவு செய்து வரும் 1,178 ட்விட்டர் கணக்குகளை நீக்க வேண்டும் என மத்திய அரசு ட்விட்டர் நிர்வாகத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு பதிலளித்த ட்விட்டர் தரப்பு, “உள்ளடக்கம் ட்விட்டரின் விதிகளை மீறினால், நிச்சயம் அது நீக்கப்படும். உள்ளடக்கம் ட்விட்டர் விதிகளை மீறுவதாக இல்லாவிட்டாலும் அதிகார வரம்பில் அது சட்டவிரோதமானது என்று தீர்மானிக்கப்பட்டால் அப்போதும் நீக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து விதிமுறைகளை மீறி அவதூறு செய்திகளை பதிவிட்டதாக 500 கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் நிரந்தரமாக முடக்கியுள்ளது. தொடர்ந்து அவதூறு பரப்பும் மேலும் சில கணக்குகள் முடக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.