நெய்வேலி தொ.மு.ச அலுவலகத்தில் பா.ம.க உள்ளிட்ட மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் தி.மு.க-வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. அதில் காணொலி காட்சி மூலம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசுகையில், “தி.மு.க ஆட்சியில்தான் வன்னியர் சமுதாயம் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக அறிவிக்கப்பட்டது.
20 சதவீத இடஒதுக்கீடும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்டது. இடஒதுக்கீடு கேட்டுப் போராட்டம் நடத்தி உயிர் நீத்தவர்களின் குடும்பத்திற்கு உதவித் தொகையைும் அளித்தது. டி.ஜி.பி-யாகவும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை நியமித்த ஆட்சி தி.மு.க. ராமதாஸ் சொந்த ஆதாயத்திற்காக – சுய நலத்திற்காக, தி.மு.க., வன்னியர் சமுதாயத்திற்குச் செய்த சாதனைகளை மறைத்து பொய்ப் பிரசாரம் செய்து வருகிறார். ராமதாஸ் தி.மு.க.வைப் பற்றி விமர்சிக்கும்தோறும் அக்கட்சியில் உள்ளவர்கள் தி.மு.க.வை நோக்கி அதிக அளவில் வரப் போகிறார்கள்” என்றார்.