ரஜினி, கமல் இருவரும் அரசியல் அரங்கில் இப்போது பிஸியாகி விட்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்களின் 25 வருட காத்திருப்புக்கு விடை கிடைத்துவிட்டது. ஒருவழியாக அரசியலுக்கு வருவதாகச் சொல்லிவிட்டார் ரஜினி. ’’இப்போ இல்லைன்னா எப்பவுமே இல்லை’’ என ரஜினி சொன்ன வார்த்தைகளை டிரெண்டாக்கி அவரது கட்சியின் பெயர், கூட்டத்துக்காக காத்திருக்கிறது பெரும்கூட்டம்.
கமலைப் பொறுத்தவரை மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கி கடந்த பாராளுமன்றத் தேர்தலையே தனித்து சந்தித்துவிட்டார். வரும் தேர்தலுக்கான பிரச்சார வியூகத்தை வகுத்துக்கொண்டு களம் இறங்கிவிட்டார் கமல்.
இப்படியான சூழலில் ரஜினி, கமலுக்கு கிளி ஜோசியம் பார்ப்போமே என களத்தில் இறங்கியது அகம் தமிழ். தென்காசியை சேர்ந்த கிளி ஜோசியர் அருணாச்சலத்தை பார்த்தேன். அவரது கிளி, மணி முதலில் சூப்பர் ஸ்டாருக்கு ஒரு சீட் எடுத்தது. அதை எடுத்துப்பார்த்த அருணாச்சலம் சீட்டில், ‘’மகாலெட்சுமி வந்திருக்கா…இவரு வீட்டுக்கு, தொழிலுக்கு லெட்சுமி. நினைச்ச காரியம் முடியும். திட்டங்கள் போட்டா நிறைவேறும். தெய்வ சப்போர்ட் இருக்கு. மனசு கலங்கக் கூடாது. எந்த பிரச்னையும் வராது…’ என்றவரிடம் ரஜினிகாந்த் முதலமைச்சர் ஆக வாய்ப்பு இருக்கா என கொக்கியைப் போட்டேன்.
இந்த முறை கிளியை விட்டுவிட்டு என்னை சீட் எடுக்கச் சொன்னார். அதில், சாய்பாபா வர ‘’அமைச்சராகும் பலன் இருக்கும்.’’ என்றார்.
தொடர்ந்து கமலஹாசனுக்கு சீட் எடுக்கச் சொல்ல, கிளி இரண்டு, மூன்று முறை குழம்பியபடியே ஒரு அட்டையை எடுத்து வந்தது. அதில் மதுரை மீனாட்சி படம் வர, அவருக்கும் நினைத்த காரியம் முடியும். என்றார் அருணாச்சலம்.
தொடர்ந்து ரஜினி, கமல் கூட்டணி நேர வாய்ப்பிருக்கிறதா? என கிளி மணியிடம் கேட்டார். சினிமாவில் சேர்ந்து நடித்த ஆரம்பகாலத்தைப் போல, தமிழர்களின் நலனுக்காக ஒரு அணியில் சேர்வார்களா? என கொக்கிப் போட்டேன். மணி இப்போது எடுத்தப்படத்தில் ‘முருகன்’ வர, முருகனுக்கு இரண்டு பொண்டாட்டி. ஒற்றுமையாத்தானே இருக்காங்க. வள்ளி, தெய்வானை மாதிரி. இரண்டு பேரும் கூட்டணி சேருவாங்க…’’ என சொல்ல கிளி சிறகடித்துவிட்டு கூண்டுக்குள் போய்க்கொண்டது.
இதை வீடியோ பதிவாக அகம் தமிழ் யூடியூப் பக்கத்தில் பார்க்கலாம்.