பாலியல் குற்றச்சாட்டில் சர்ச்சையில் சிக்கிய பிஷப் படத்தைப் போட்டு காலண்டர் அச்சடித்து இருப்பது கேரளத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சீரோ மலபார் சர்ச் பிரிவைச் சேர்ந்த திருச்சூர் ஆர்ச் டயோசீஸ் மண்டலம் 2021 ஆண்டுக்காக புதுவருட காலண்டரை அச்சிட்டு, சமீபத்தில் அந்த பிரிவை சேர்ந்த கிருஸ்துவர்களின் வீடுகளுக்கு வழங்கியது. அந்த காலண்டரில் கேரள கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆயர் பிராங்கோ முல்லக்கலின் புகைப்படம் மார்ச் மாதத்துக்கான பக்கத்தில் இடம்பெற்றிருந்தது. இது அந்த பிரிவை சேர்ந்த கிருஸ்துவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள ஆயர் இல்லத்துக்கு எதிராக அந்த பிரிவினர் சர்ச்சைக்குரிய புதுவருட காலண்டரை எரித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இது தொடர்பான விடியோ பதிவும் சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.
கேரள மாநிலத்தை சேர்ந்த, 44 வயதுடைய ஒரு கன்னியாஸ்திரியை கடந்த 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பல முறை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக கடந்த செப்டம்பர் 2018 ஆம் ஆண்டு ஆயர் பிராங்கோ முல்லக்கல் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இவர் தற்போது பிணையில் வெளிவந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
கோவிட் பரவல் காரணமாக இந்த வழக்கு விசாரணையை தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டும் என ஆயர் பிராங்கோ முல்லக்கல் சார்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.