1971 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் இந்தியா ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்தை வீழ்த்தியது. இதன் விளைவாக வங்கதேசம் என்ற ஒரு நாடு உருவானது. இரண்டாம் உலக போருக்கு பிறகு மிகப்பெரிய அளவில் இராணுவ வீரர்கள் சரணடைந்த நிகழ்வும் இந்த போரில் தான் நடந்தது.
இதன் 50 ஆவது ஆண்டு நினைவு கொண்டாட்டங்கள் டிசம்பர் 16 முதல் தொடங்குவதை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான துவக்க நிகழ்ச்சி புது தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி போர் நினைவிடத்தில் உள்ள அணையா ஜோதியிலிருந்து பொன்விழா வெற்றி ஜோதியை ஏற்றி நான்கு வீரர்களிடம் கொடுத்தார். 1971 ல் நடைபெற்ற போரில் பங்கேற்று பரம் வீர் சக்ரா மற்றும் மகா வீர் சக்ரா விருது பெற்ற வீரர்களின் கிராமங்கங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த ஜோதி எடுத்துச் செல்லப்படுகிறது.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, முப்படைகளின் தலைமை தளபதி, முப்படைகளின் தளபதிகள் ஆகியோர் போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பல்வேறு இராணுவ உயர் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.