புதுவை யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நான்கு பேர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அங்கு ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் சமபலத்தோடு இருந்தன. இந்நிலையில் மேலும் ஒரு காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர்.
இப்படியான பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாராயணசாமியின் நீண்ட போராட்டத்துக்கு மத்தியில் புதுவை துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியை மத்திய அரசு அந்த பொறுப்பில் இருந்து விடுவித்தது. இதனைத் தொடர்ந்து தமிழிசை செளந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பாக புதுவை துணை நிலை ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழிசை பொறுப்பேற்ற கையோடு அவரிடம் எதிர்கட்சியான என்.ஆர் காங்கிரஸ் சார்பில் நாராயணசாமிக்கு பெரும்பான்மை இல்லை என மனு கொடுக்கப்பட்டது . இதனிடையில் நாராயணசாமி அரசுக்கு தமிழிசை இன்று பெரும்பான்மையை நிரூபிக்க கெடு கொடுத்து இருந்தார்.
இந்நிலையில் சற்றுமுன்பு பேரவையில் பெரும்பான்மை இல்லை என சபாநாயகர் அறிவித்தார். 5 காங்கிரஸ், ஒரு திமுக எம்.எல்.ஏவில் ராஜினாமாவால் பெரும்பான்மையை இழந்தது காங்கிரஸ் கட்சி. பேரவையில் பாஜக மற்றும் எதிர்கட்சிகளின் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்து முதல்வர் நாராயணசாமி ஆவேசமாக பேசிவிட்டு வெளியேறினார். பேரவையில் முதல்வர் நாராயண்சாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பேசிய நாராயணசாமி, ‘மத்திய பாஜக அரசு புதுவையை தொடர்ந்து புறக்கணித்தது. மாநிலத்துக்கு வரும் நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டப்பட்டது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கொடுத்த நெருக்கடியை யும் தாண்டி 5 ஆண்டுகள் ஆட்சியை நடத்தியிருக்கிறோம். புதுவைக்கு வெறும் 20 சதவிகிதம் தான் நிதி கொடுத்தார்கள்.’’எனவும் பேசினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவின் நியமன எம்.எல்.ஏக்கள் மூவரும் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டதையும் காங்கிரஸ் சர்ச்சையைக் கிளப்பியது. நியமன உறுப்பினர்கள் தவிர மற்றவர்கள் வாக்களித்தால் எங்களுக்கே ஆட்சியமைக்கும் அதிகாரம் இருப்பதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி நியமன உறுப்பினர்கள் வாக்களிக்கலாம் என பாஜக சுட்டிக்காடியது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து நாராயணசாமி அரசு கவிழ்ந்ததாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து ராஜினாமா கொடுத்தார் நாராயணசாமி. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கே வாக்குரிமை உண்டு. இந்த கருத்தை சபாநாயகர் ஏற்கவில்லை. இதனால் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்து நானும், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், திமுகவினர் ஆகியோர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளோம். நியமன எம்.எல்.ஏக்களின் மூலம் ஆட்சியைக் கவிழ்த்த பாஜக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.’’என்றார்.