தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் வேகம் காட்டிவருகிறது. வெற்றி நடைபோடும் தமிழகமே என அதிமுக விளம்பரம் செய்துகொண்டிருக்கிறது. இன்னொரு புறத்தில் திமுகவோ ஸ்டாலின் தான் வாராரு..விடியல் தரப்போராரு என்னும் பெயரில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.
கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் தேமுதிக தனித் துப் போட்டியிட்டது. ஆனால் அந்தத் தேர்தலிலேயே 8 சதவிகித வாக்குகளைப் பெற்று தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக தேமுதிக உருவெடுத்தது. அதே நேரம், அந்தத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் மட்டுமே வெற்றீபெற்றார். அதன் பின்னர் அதிமுகவோடு அணி சேர்ந்த தேமுதிகவுக்கு, திமுகவை கூட கூடுதல் இடங்கள் கிடைக்க எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தது. நாளடைவில் விஜயகாந்த் உடல்நிலை மோசமாக தேமுதிகவும் பலவீனமடையத் துவங்கியது.
இந்த சூழலில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணிக்கு தலைமை வகித்த தேமுதிக ஒரு இடத்தில் கூட ஜெயிக்கவில்லை. இப்போது அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர்ந்தாலும் அந்தக் கட்சிக்கு உரிய மரியாதைக் கொடுப்பதில்லை என்ற பொருமலும் கேட்கிறது. தேமுதிகவை அதிமுக தொடர்ந்து உதாசீனப்படுத்த தேமுதிகவின் பிரேமலதா கொஞ்சம் கடுப்பாகவே பேசி வருகிறார்.
இப்படியான சூழலில் தமிழகம், புதுவை சட்டசபைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட வரும் 25 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தேமுதிக தலைமை அறிவித்துள்ளது.