புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக தமிழிசை செளந்தர்ராஜன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். ஏற்கனவே தெலங்கானா ஆளுநராக இருக்கும் தமிழிசை புதுச்சேரி கவர்னர் பதவியையும் கூடுதலாக கவனிக்க உள்ளார். புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக பதவி ஏற்ற தமிழிசை செளந்தர்ராஜன் கூறுகையில், “என் மீது நம்பிக்கை வைத்து கூடுதல் பொறுப்பு கொடுத்துள்ளார்கள். பதவிப்பிரமாணத்தின் போது தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. துணை நிலை கவர்னராக இல்லாமல், மக்களுக்கு துணை புரியும் கவர்னராக இருப்பேன். தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய இரட்டைக் குழந்தைகள் என் கையில் உள்ளது. இரட்டைக் குழந்தைகளை கையாளும் திறன் மருத்துவரான எனக்கு உள்ளது. கவர்னர் மற்றும் முதல்வரின் அதிகாரம் எனக்கு தெரியும். அவரவர் அதிகாராத்திற்கு உட்பட்டு ஜனநாயக முறைப்படி செயல்பட வேண்டும் என்பது எனது விருப்பம்.
அரசு மீதான பெரும்பான்மை தொடர்பான கோப்பை இன்னும் பார்க்கவில்லை. இது தொடர்பாக அனைவரையும் ஆலோசித்து முடிவு செய்யப்படும். சட்டத்திற்கு உட்பட்டு அரசியல் நகர்வுகள் இருக்கும். எனது ஒவ்வொரு நகர்வும் புதுச்சேரி மக்களின் நலனுக்காக இருக்கும்” எனக்கூறினார்.