மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் நகரில் உள்ள பல்வேறு பகுதிகளை சுத்தப்படுத்தும் பணியை அம்மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மக்கள் தெருக்களில் குப்பைகளை வீசி எறியக்கூடாது என்று எச்சரிக்கை செய்வதோடு தூய்மையாக சுற்றுபுறத்தை பராமரிப்பது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விதிகளை மீறி தூய்மைப்படுத்தப்பட்ட தெருக்களில் குப்பைகளை போடுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது
இந்நிலையில் குவாலியர் நகரில் உள்ள ஒரு தெருவை மாநகராட்சி பணியாளர்கள் அப்போது தான் சுத்தப்படுத்தி முடித்தனர். ஆனால் அங்கு அலைந்துக் கொண்டிருந்த எறுமை மாடுகள் அந்த தெருவில் சாணம் இட்டு சென்றன. உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் அந்த எறுமை மாடுகளின் சொந்தகாரரான பீட்டல் சிங் என்பவருக்கு ரூபாய் 10,000/- அபராதம் விதித்தனர்.
தெருக்களை சுத்தம் செய்யும் போதே அந்த எறுமை மாடுகள் அங்கே உலாவிக்கொண்டிருந்தன. அப்போதே பீட்டல் சிங்கிடம் எறுமைகளை சாலைகளுக்கு வராமல் அவரது இடத்திலேயே கட்டி போடச் சொன்னோம் ஆனால் அதையும் மீறு அவை தெருக்களில் சாணி போட்டதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். பால் வியாபாரியான பீட்டல் சிங் அதிகாரிகள் விதித்த அபராத தொகையை கட்டி விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சமீபத்தில் குவாலியர் மாநகராட்சி சமூக ஆர்வலர்களின் துணையோடு அங்குள்ள பிரபலமான குவாலியர் அரண்மனையை சுத்தப்படுத்தியது. பிளாஸ்டிக் பொருட்களை அரண்மனைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கொண்டு வரக்கூடாது எனவும் குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடவும் மக்களுக்கு விழிப்புணர்வும் வழங்கப்படுகிறது.