தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சட்ட போராட்ட குழு நிர்வாகி பெருமாள் பிள்ளை அரசு மருத்துவர்களின் உரிமைக்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருபவர். கரோனா காலத்தில் உயிரையே பணயம் வைத்து களத்தில் நிற்கும் அரசு மருத்துவர்களை தரக்குறைவாக நடத்துவதாக ரொம்பவே ஆதங்கப்படுகிறார்.
இதுதொடர்பாக அரசு மருத்துவர் பெருமாள்பிள்ளை கூறுகையில், ‘’புதிதாக பதவியேற்ற இந்தியாவுக்கான பனாமா, பிரிட்டன், அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளின் தூதர்களின் நியமனத்தை குடியரசு தலைவர் அங்கீகரிக்கும் நிகழ்ச்சி காணொலி வழியில் நடைபெற்றது. அப்போது பேசிய குடியரசு தலைவர், ஒட்டுமொத்த சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தைக் காக்கும் வகையில், கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு எதிராக ஒருங்கிணைந்த உறுதியான நடவடிக்கைகளை எடுத்த நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இந்தியாவின் தடுப்பூசி உதவித் திட்டத்தின் கீழ் மிகக் குறைந்த விலையிலான கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு பல நாடுகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் ‘உலகின் மருந்தகம்’ என்ற மதிப்பை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது என்று தெரிவித்தார்கள்.
நம்மை பொறுத்தவரை, குடியரசு தலைவர் தெரிவித்துள்ளது போன்று உலகின் மருந்தகம் இந்தியா என்பது உண்மை தான். அதிலும் சுகாதாரத் துறையில் இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழகம் உள்ளது என்பதில் அரசு மருத்துவர்களும் பெருமைப்படுகிறோம்.
6) குறிப்பாக அடிமட்டத்தில் உள்ள மக்களுக்கும், Primary Health Care முதல் Tertiary care வரை இலவசமாக கிடைக்க தமிழக அரசு மருத்துவர்கள் தங்கள் பங்களிப்பை முழுமையாக வழங்கி வருகிறோம். இதனால் கிராமப்புற சுகாதாரத்தில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இருப்பினும் நம்முடைய சுகாதாரக் கட்டமைப்புக்காக, தங்கள் வாழ்நாளில் பெரும் பகுதியை தியாகம் செய்து வரும் அரசு மருத்துவர்களுக்கு, நாட்டிலேயே குறைவான அவமானகரமான ஊதியம் தரப்படுவது தான் மிகுந்த வேதனை அளிக்கிறது.
எதற்கு தான் டாக்டரானோம் என 18 ஆயிரம் அரசு மருத்துவர்களுமே ஒவ்வொரு நாளும் வருத்தப்படும் வகையில், தமிழக அரசு நம்மிடம் நடந்து கொள்கிறது என்பது தான் உண்மை. அதாவது துறை செயல்பாடுகளில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக இருக்கும் அதேவேளையில், நாட்டிலேயே மருத்துவர் நலனுக்கு எதிரான அரசாக உள்ளது என்பது தான் வருத்தமான உண்மை.
எனவே தமிழகத்தில் தொடர்ந்து மருத்துவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்தும், சுகாதாரத் துறையை காக்கும் பொருட்டும் மரு. எல்.என் காட்டிய வழியில் மீண்டும் போராட்டத்தில் இறங்குவதை தவிர நமக்கு வேறு வழியில்லை என்ற நிலைக்கு அரசு தான் நம்மை தள்ளி விட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கும், உழைப்புக்கும் ஏற்ற ஊதியம் இல்லை.’’எனவும் ஆதங்கப்பட்டார்.