நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறுகையில், “2021ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இது முக்கியமான கூட்டத்தொடர். நம் நாட்டுக்கு சிறந்த எதிர்காலம் கிடைப்பதற்கு இந்த வருடம் மிக முக்கியமானது. சுதந்திர போராட்ட வீரர்கள் கண்ட கனவை நிறைவேற்ற பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த கூட்டத்தொடரை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் எந்த தடையும் இருக்கக்கூடாது இந்திய வரலாற்றில் 2020ம் ஆண்டு பல்வேறு சலுகைகள் மூலம் ஐந்து மினி பட்ஜெட்டுகளை நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ளார். அவற்றின் ஒரு அங்கமாக இந்த பட்ஜெட் இருக்கும் என நம்புகிறேன். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதங்கள் ஆக்கப்பூர்வமானதாக அமைய வேண்டும். கூட்டத்தொடர் சுமூகமாக நடக்க உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஜனநாயகத்தை காக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட வேண்டும்” என்றார்.