சென்னை மேற்கு மாம்பலத்தில் ரூபி ராயல் ஜூவல்லர்ஸ் அண்ட் பேங்கர்ஸ் என்ற நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இஸ்லாமியர்களுக்கு மட்டும் வட்டியில்லா நகைக்கடன் வழங்குவதாக அந்த நிறுவனம் அறிவித்தது. அதை நம்பி ஆயிரக்கணக்கானவர்கள் நகைகளை அடமானம் வைத்தனர். வாடிக்கையாளர்கள் எல்லோருமாக அடகுவைத்த நகை 500 கிலோ என்ற அளவில் வந்துள்ளது. அந்த நகைகளை அரசுடமை வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களில் மறு அடகு வைத்திருக்கிறார்கள் அந்த நிறுவனத்தினர்.
பின்னர் அந்த பணத்துடன் எஸ்கேப் ஆகிவிட்டனர். நகைகளை பறிகொடுத்து மக்கள் இதுபற்றி போலீஸில் புகார் அளித்தனர். தலைமறைவான அந்த நிறுவன நிர்வாகிகளான சையது ரகுமான், அனிசூர் ரகுமான் மற்றும் ஊழியர்கள் ரிகானா, சஜிதா, ஷஹீனா ஆகிய ஐந்து பேரை தனிப்படை போலீசார் தெலங்கானாவில் கைது செய்தனர். அடகு பெறப்பட்ட நகைகள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.