அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணாவின் நினைவு இல்லத்தில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்றார். அங்கு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “ஜெயலலிதா முதல்வராக இருக்கும் வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது நடந்து வரும் அடிமை அ.தி.மு.க அரசு மாநிலத்திற்கான கல்வி உரிமைகளை பறிகொடுத்து வருகிறது.
நீட் தேர்வால் இதுவரை 14 மாணவர்கள் மரணமடைந்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். சசிகலா பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்ததும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று சபதம் செய்ய வருவார். அதனால்தான் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட நினைவு மண்டபம் மீண்டும் மூடப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வந்து தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார்.
அதே போல அதிமுகவில் உள்ள அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராக தேர்வு செய்யப்படவில்லை. அடுத்தவர் காலில் விழுந்து முதல்வராக தேர்வு செய்யப்பட்டு பதவியில் நீடித்து வருகிறார்” என்றார்.