நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசுகையில், “நம் நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து பலவிதமான சவால்களை சந்தித்துள்ளது. சவால்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், இந்தியாவை தடுத்து நிறுத்துவது முடியாத காரியம்.
பேரிடர்களை எல்லாம் கடந்து நாம் ஒற்றுமையாக இருக்கிறோம். நம் நாடு ஒன்றுபட்டு நிற்கும் போதெல்லாம் இலக்குகளை எளிதாக அடைந்துள்ளது. கொரோனாவை வலிமையுடன் எதிர்த்து போராடினோம். கொரோனாவுக்கு எதிரான போரில் பல உயிர்களை காப்பாற்றியுள்ளோம். கொரோனா பரவலை தடுக்க உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, லட்சகணக்கான உயிர் காப்பாற்றப்பட்டுள்ளன. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கொரோனா தடுப்பூசிகளை நாம் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்து வருகிறோம். தடுப்பூசி வழங்குவதில் உலகிலேயே முதலிடம் வகிக்கிறது இந்தியா.
ஊரடங்கு காலத்தில் யாருமே உணவிற்காக சிரமப்படும் நிலை ஏற்படவில்லை. ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தால் பலரும் பயனடைந்திருக்கிறார்கள். இந்தியா அனைத்து சவால்களையும் எதிர்த்து போராடும். ஏழைகள் நல்வாழ்வு திட்டம் மூலம் ஆறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பயன் அடைந்துள்ளார்கள்” என்றார்.