குரோசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர், 20 பேர் வரை காயமடைந்திருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரோசியாவில் உள்ள பெட்ரின்ஜா நகரத்தை மையமாக கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பெட்ரின்ஜா நகரத்தில் உள்ள வீடுகள் குலுங்கின மேலும் சில கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
குரோசிய தலைநகர் ஜாக்ரெப்பிலிருந்து தென்கிழக்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெட்ரின்ஜா என்ற சிறிய நகரத்தை பூகம்பம் மதியம் 12.19 மணிக்கு தாக்கியதாக செவ்வாய்கிழமை ஐரோப்பிய மத்திய தரைகடல் நில அதிர்வு மையம் தெரிவித்ததாக சின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதகதியில் நடைபெற்று வருவதாகவும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.