தமிழ்த்திரையுலகில் நகைச்சுவை நடிகர் போண்டாமணிக்கு முக்கிய இடம் உண்டு. வைகைப்புயல் வடிவேலுவின் சினிமா கூட்டணியில் முக்கியமானவர்களில் இவரும் ஒருவர். இன்று போண்டாமணியாக பட்டி, தொட்டியெங்கும் ரீச் ஆகியிருக்கும் இவரது இயற்பெயர் கோதீஸ்வரன். இவர் அடிப்படையில் ஈழத்தமிழர். இவரது ஆரம்பகால வாழ்க்கை வலியும், வேதனையும் நிரம்பியது.
இலங்கையில் மன்னார்பகுதிதான் போண்டா மணியின் பூர்வீகம். அவரது தந்தை மாரிமுத்துசெட்டியார் மன்னார் பகுதியில் சொந்தமாக கடைவைத்து நடத்திவந்தார். அவரோடு சேர்த்து, அவரது உடன்பிறந்தோர் மொத்தம் 16 பேர். போண்டா மணியின் சிறுவயதில் கச்சத்தீவுவழியாக இந்தியா வந்து குடியேற அவரது குடும்பத்தினர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது திடீர் என இலங்கை ராணுவம் குண்டுவீசியது. இதில் போண்டாமணியின் இரண்டு அண்ணன், ஒரு அக்கா, அக்காவோட குழந்தைகள் நான்குபேரும் இறந்துவிட்டார்கள். இதே குண்டுவீச்சில் பலியான போண்டா மணியின் அம்மாவின் உடம்பு இன்றுவரை கிடைக்கவில்லை.
போர் பிண்ணனியில் பள்ளிக்கூடத்தில் படித்தாலும் போண்டா மணிக்கு இயல்பாகவே கலை ஆர்வம் இருந்தது. மன்னார்பகுதியில் மறுமலர்ச்சி வினாயகர் கலைமன்றம் என்னும் அமைப்பையும் நடத்தியவர் கலை ஆர்வத்தில் அகதியாக இந்தியாவுக்கு வந்து, இன்று தமிழின் முக்கிய நகைச்சுவை நடிகர்களிலும் ஒருவராக வலம்வருகிறார். மனதில் சின்ன வயதில் குடும்பத்தையே பறிகொடுத்த சோகத்தை ஒரு ஓரத்தில் ஒளித்துவைத்துவிட்டுத்தான் நம்மை சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறார் இந்த ஈழத் தமிழ் காமெடியன்! தற்போது சென்னையில் வசிக்கும் போண்டாமணிக்கு மனைவி மற்றும் இருகுழந்தைகள் உள்ளனர்.