மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒன்பதுகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று டில்லியில் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “விவசாயிகளின் போராட்டத்தை கலைப்பதற்கு பேச்சுவார்த்தை என்ற பெயரில் மத்திய அரசு பல முறை முயற்சி எடுத்தது. அது பலனளிக்காமல் போய்விட்டது. எனவே அராஜக வழியை தேர்ந்தெடுத்துள்ளது அரசு. என்.ஐ.ஏ, அமலாக்கத்றை விசாரணைகள் மூலம் விவசாயிகளை பணிய வைத்துவிடலாம் என அரசு எண்ணுகிறது. அந்த எண்ணம் ஒருபோதும் பலிக்காது. குடியரசு தினத்தன்று ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின நிகழ்ச்சிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல், மிக அமைதியான முறையில் டிராக்டர் பேரணிநடைபெறும். எத்தனை தடைகள் வந்தாலும் இந்தப் பேரணியை நடத்துவோம்” என்றனர்