இந்தியா – சீனா இடையே கடந்த ஆண்டு மே மாதம் முதலே முதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி இரவு நேரத்தில் லடாக் அருகே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய வீரர்கள் ரோந்து சென்றனர். அப்போது இந்திய வீரர்கள் மற்றும் சீன ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. அந்த பகுதியில் துப்பாக்கி, வெடிகுண்டுகள் பயன்படுத்தக்கூடாது என்பதால் இரும்புத் தடி, இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்ட கம்புகள், கற்கள் ஆகியவற்றைக் கொண்டு சீன படை கொடூரமாக தாக்கியது.
இதில் நம் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். அதே சமயம் இந்தியாவும் பதில் தாக்குதல் நடத்தியது. சீன வீரர்கள் 43 பேர் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் சீன தரப்பில், பலியானவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில், இந்திய ராணுவ வீரர்களின் பதில் தாக்குதலில் 4 சீன வீரர்கள் உயிரிழந்ததாக சீனா அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. அவர்களது பெயர்களையும் சீனா வெளியிட்டுள்ளது. சென் ஹாங்ஜுன், சென் சியாங்ராங், சியாவோ சியுவான் மற்றும் வாங் ஜுயோரன் ஆகியோர் இந்திய ராணுவத்தினருடனான மோதலில் உயிரிழந்துள்ளதாக சீன ஊடக அறிக்கைகளை மேற்கோளிட்டு ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.