மண்டல மற்றும் மகரவிளக்கு வழிபாடுகளுக்காக கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்ப சுவாமி கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோவிட் 19 பரவல் காரணமாக தற்போது வார நாட்களில் நாள் ஒன்றுக்கு 1,000 பகதர்களும் வார இறுதி நாட்களில் 2,000 பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவிட் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி குறைந்தது 10,000 பக்தர்கள் வந்து செல்வதற்கான இடவசதி சபரிமலையில் இருப்பதாகவும் எனவே நாள் ஒன்றுக்கு குறைந்தது 10,000 பக்தர்களை சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என கேரள மாநில திருக்கோவில்களை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேரள அரசிடம் அனுமதி கோரியது. மேலும் பல்வேறு அமைப்புகளும் சபரிமலையில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தை நாடியது.
இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, குறைந்தது மண்டல பூஜை நிறைவடையும் வரையாவது சபரிமலையில் தற்போது அனுமதிக்கப்பட்டு வரும் பகதர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது என கேரள அரசு தெரிவித்துள்ளது. மேலும் நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதானத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பதால் கோவிட் பரவல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என அரசு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்துக்கான மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் சபரிமலை நடை திறக்கப்பட்டத்திலிருந்து இதுவரை 51 பக்தர்கள், 245 அலுவலர்கள் மற்றும் 3 இதர நபர்கள் உட்பட 299 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபரிமலை அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் கோவிட் பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை 31 சதவிகிதமும் அருகில் உள்ள கோட்டயம் மாவட்டத்தில் 11 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாகவும், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே கே சைலஜா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் அதிகரித்து வரும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மண்டல பூஜை முடிவடைந்த (டிசம்பர் 26) பின்னர் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் பணியாற்ற வரும் அலுவலர்கள் என அனைவருக்கும் பிசிஆர் சோதனையை (RT-PCR) கேரள சுகாதாரத் துறை கட்டாயமாக்கியுள்ளது.