இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் நேற்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவானது. மமுஜி மாவட்டத்தின் தென் மேற்கே 36 கிமீ தொலைவில் 18 கிலோமீட்டர் ஆழத்தில் இதன் மையம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் நொறுங்கி விழுந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
பொதுமக்கள் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக்கொண்டனர். பாதிக்கப்பட்ட் பகுதிகளுக்கு மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மமுஜி மாவட்டத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 26 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதேபோல், மஜினே மாவட்டத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இதில் 600-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.