மு க அழகிரி தனியாக கட்சி ஆரம்பித்தாலும் திமுக’விற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி கூறினார்.
விடியலை நோக்கி என்ற தலைப்பில் திராவிட முன்னேற்ற கழகத்தினர் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சிவகாசியில் உள்ள அச்சக மற்றும் பட்டாசு தொழிலாளர்களை சந்தித்து கனிமொழி உரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது கனிமொழி, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆகையால் மு க அழகிரி கட்சி தொடங்கினாலும் திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் திமுகவின் வெற்றியை யாரும் பரித்து விட முடியாது என்றும் கூறினார்.
அரசின் தவறான கொள்கை முடிவால் சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர். பட்டாசு தொழிலை நம்பியுள்ள சுமார் ஒரு கோடி பேர் இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர், என்றும் கூறினார். சீன பட்டாசு குறித்து நானே நேரடியாக மத்திய அமைச்சரை சந்தித்து பேசியுள்ளேன். திமுக எம்பி திருச்சி சிவாவும் அவையில் பட்டாசு தொழிலாளர்களின் பிரச்சனை குறித்து பேசியுள்ளார். பட்டாசு தொழிலாளர்களின் பிரச்சனை குறித்து திமுக மட்டும் தான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது என்றும் கனிமொழி கூறினார்.
தமிழ்நாட்டில் வேலை வாய்பின்மை மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டும் முதல்வராக மட்டுமே உள்ளார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.