ரசிகர்களின் 25 வருட காத்திருப்புக்கு ஒரு நொடியில் அறிக்கைவிட்டு குட்பை சொல்லிவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சமூகவலைதளங்களில் அவருக்கு ஆதரவு, எதிர்ப்பு என இருதரப்பிலும் விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கிறது. இப்படியான சூழலில் அஞ்சா நெஞ்சன் பேரவை என்னும் பெயரில் ரஜினி தமது அரசியல் நிலைப்பாட்டை மாற்ற வேண்டாம் என மு.க.அழகிரி விஸ்வாசிகள் சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த 1995ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பாட்ஷா திரைப்படம் வெளியானது. அப்போது இருந்தே ரஜினி மீது அரசியல் முத்திரையும் விழுந்துவிட்டது. அந்தபடத்தின் வெற்றிவிழாவில் படத்தை தயாரித்த அப்போதைய அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனை மேடையில் வைத்துக்கொண்டே தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் தலைதூக்கிவிட்டது என பேசினார் ரஜினிகாந்த். இந்த விசயம் காதில் விழுந்ததுமே ஆர்.எம்.வீரப்பனின் அமைச்சர் பதவியை பறித்தார் ஜெயலலிதா. அப்போது இருந்தே ரஜினி அரசியலுக்கு வருவதாக அவ்வப்போது அறிகுறிகள் தெரிவதும், தொடர்ந்து அவரே பின்வாங்குவதும் நடந்து வந்தது.
அரசியலில் ரஜினி மக்கள் பக்கமா? காப்பரேட் பக்கமா? என்பதே புரியாத புதிர். ஒருபக்கம் கபாலி, காலா படங்களில் மக்களின் பக்கம் நின்று பேசிக்கொண்டே, இன்னொரு பக்கத்தில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்துவிட்டு தொட்டதுக்கெல்லாம் போராடினால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என பேட்டி கொடுத்தார். தொடர்ந்து அவரே மக்களிடம் எழுச்சி வரட்டும். நான் அரசியலுக்கு அப்போது வருகிறேன் எனவும் பேட்டி கொடுத்தார். இப்படி அரசியலில் ரஜினி பலமுறை விளங்க முடியாத கவிதையாக இருந்துள்ளார்.
திமுகவில் ஓரம்கட்டப்பட்டு இருக்கும் மு.க.அழகிரி எப்போதுமே ரஜினி மீது மாறாத அன்பு கொண்டவராக இருக்கிறார். அவரது ஒவ்வொரு பிறந்தநாளுக்குமே அவரை அழைத்து வாழ்த்து சொல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். அதேபோல் ரஜினி அண்மையில் ஹைதராபாத்தில் ‘அண்ணாத்தே’ பட சூட்டிங்கில் இருந்தபோது மாறுபட்ட ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார். அப்போதும்கூட தொலைபேசியில் நலம் விசாரித்தார் அழகிரி. திமுகவில் ஸ்டாலின் மீண்டும் அழகிரி வருவதை விரும்பாமல் இருக்கிறார். அழகிரியே, ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்கிறேன் என அறிவித்த பின்னரும் ஸ்டாலின் மனம் இறங்கவில்லை. இப்படியான சூழலில் அழகிரி, கருணாநிதியின் மகனாக இருப்பதால் அதிமுகவிலும் சேரமுடியாது. அதேநேரம் பாஜகவில் சேர்ந்தால் தமிழகத்தில் தேசிய அரசியல் எடுபடுமா என்பதும் சிக்கலாக உள்ளது. இந்த சூழலில் அழகிரி தன் நண்பரான ரஜினியோடு கைகோர்க்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அவரது ஆதரவாளர்களே சொல்லிவந்தனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் முடிவில் இருந்து திடீரென பின்வாங்கிவிட்டதால் அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, ரஜினியின் அரசியலை ஒட்டி தங்கள் அரசியலுக்கும் காய்நகர்த்த திட்டமிட்ட மு.க.அழகிரி வட்டாரமும் அதிர்ந்து கிடக்கிறது. ரஜினி அரசியலை கடந்த மூன்று வருடங்களாகவே பேசியும், செதுக்கியும் வந்த தமிழறிவி மணியனும் இதில் ஒருவர் என்கிறார்கள். தனது காந்திய மக்கள் இயக்கத்தையே ரஜினி கட்சியோடு சேர்க்க இருந்தவருக்க்கும் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையெல்லாம்விட கடந்த சிலநாள்களுக்கு முன்பு ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் பூத் கமிட்டி அமைக்கவும் மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு வந்தது. அவர்களும் பூத் கமிட்டி அமைத்தனர். அதேபோல் நிர்வாகிகள் நியமனத்துக்கு பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரஜினி மன்றத்தில் இருந்து எச்சரிக்கை வந்தது. இதையெல்லாம் வைத்து கட்சி தொடங்கப்படும் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆழமாக நம்பினர். ஆனால் விதைக்காமலேயே அறுவடைக்கு கிளம்பியது போல், கட்சியே துவங்காமல் ஏன் பூத் கமிட்டி அமைத்தார்? என மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.