காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று டில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “வேளாண் சட்டங்கள் மூலம், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு அழித்துவிட்டது. மத்திய அரசு விவசாயிகளை அழைத்து அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் விவசாயிகளை மத்திய அரசு தாக்குகிறது. விவசாயிகள் எதுவும் சொல்லமாட்டார்கள் என பிரதமர் மோடி நினைக்கிறார்.
விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படுத்த வேண்டும். வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதே அதற்கு ஒரே தீர்வாக அமையும். விவசாயிகள் இனி வீட்டிற்கு சென்றுவிடுவார்கள் என மத்திய அரசு நினைக்க வேண்டாம். இப்போதுள்ள பிரச்னை பெரிதாகுமோ என கவலைப்படுகிறேன். தீர்வு தான் நமக்கு தேவை. போராட்டக்காரர்கள் செங்கோட்டைக்கு எப்படிச் சென்றார்கள்? ஏன் போலீஸ் அவர்களை தடுக்கவில்லை? இது சம்பந்தமாக உள்துறை அமைச்சர் சொல்ல வேண்டும்” என்றார்.