தமிழக காங்கிரஸ் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்தது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கியமாக, பா.ஜ.க அரசு விவசாயிகளுக்கு விரோதமாக கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒப்பந்த விவசாயத்தை ரத்து செய்ய வேண்டும். விவசாயச் சங்கங்களோடு கலந்து பேசி, திருத்தப்பட்ட புதிய வேளாண் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் நிறைவேறுகிறவரை விவசாயிகளின் போராட்டம் ஓயாது. கட்சியின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படும் வகையில் ஊடகங்களின் மூலமாக கருத்துகளைப் பகிரங்கமாக தெரிவிப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பலவேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.