பாகிஸ்தான் இந்திய எல்லையில் தொடர்ந்து பதட்டத்தை ஏற்படுத்திவருகிறது. சில தினங்களுக்கு முன்பு பஞ்சாப் எல்லைப்பகுதியில் ட்ரோன் மூலம் வீசப்பட்டிருந்த கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. கடந்த வாரத்தில் மட்டும் மூன்று ஊடுருவல்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இப்படியான சூழலில் இந்திய ராணுவத்தின் மூத்த தளபதி பி.எஸ்.ராஜூ நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘’ஜம்முகாஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி மன்றத்தின் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்திருப்பது மகிழ்ச்சி. காஷ்மீரில் ஜனநாயகத்தை நிலைநாட்ட மக்கள் தொடர்ந்து வாக்களிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு பணியாற்றும் வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. இப்போது கடுங்குளிர்காலம். இதைப்பயன்படுத்தி இந்திய எல்லைகோடு பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக 200 முதல் 250 பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளனர். இந்த மோசமான வானிலையைப் பயன்படுத்தி காஷ்மீரின் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு பகுதியின் வழியாகவும், தெற்கே பிர் பஞ்சா வழியாகவும் ஊடுருவ வாய்ப்பு இருக்கிறது. இதனால் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு கருவிகளின் உதவியுடன், தீவிர விழிப்போடு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
பாகிஸ்தான் நாட்டில் இப்போது உள்நாட்டுக் குழப்பங்கள் நடந்துவருகிறது. அதிலிருந்து தனது நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக குளிர்காலத்தின் உச்சகட்டமான இப்போது, பயங்கரவாதிகளை ஊடுருவல் மூலம் இந்தியாவுக்குள் அனுப்பிவைக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபடுகிறது. இதேபோல் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்கனவே உள்ளது. அதைமீறி தாக்குதல் நடத்தவும் எல்லையில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தவும் பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால் இதையெல்லாம் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது.’’என்றார்.