கொரோனோ வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. ஒவ்வொரு மாதமுடிவிலும் ஒவ்வொரு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகின்றது. தற்போது உள்ள ஊரடங்கு வருகின்ற 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கிறது. இதற்கிடையே கல்லூரி மற்றும் பள்ளிகள் பல மாதங்களாக மூடப்பட்டிருந்தது. இதன் பின்னர் தமிழக அரசு மாணவர்களின் தேர்வை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது பற்றி பெற்றோர்களிடம் கருத்து கேட்டது இதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்தனர்.
இதன் காரணமாக கடந்த 19 ஆம் தேதியிலிருந்து பள்ளிகள் திறக்கப்பட்டு பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின. இதன்படி பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஏற்கனவே சுகாதாரத்துறை அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. இதில் முக்கியமாக பள்ளிகளில் தனிமைபடுத்தப்பட்ட அறை ஒன்று கட்டாயம் இருக்கவேண்டும். காய்ச்சல் பாதிப்பு மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு சந்தேகம் ஏற்படுகின்ற மாணவர்களை இந்த அறையில் மருத்துவ குழுவினர் வரும் வரை வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவு இடப்பட்டிருந்தது மேலும் இதனை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் அவ்வாறு பின்பற்றாதவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது