நடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்தநாள் விழாவில் பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. ஏற்கனவே சில இளைஞர்களும், ரவுடிகளும் பட்டா கத்தியால் கேக் வெட்டிய சம்பவங்களுக்கு காவல்துதை நடவடிக்கை பாய்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கத்தியால் கேக் வெட்டிய சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி. இதுகுறித்து நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,”எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. இதனை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதில் பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன்.
தற்போது பொன் ராம் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.