திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் முழ்கியுள்ளது.
திருநெல்வேலி, தென்காசி ,தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முடிந்த நிலையிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இரவு பகல் பார்க்காமல் விட்டுவிட்டு இந்த மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. கடந்த ஏழு நாட்களாக சூரியனைப் பார்க்காத வகையில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அணை பகுதிகளிலும் கனமழை அடித்து வாங்குகிறது. சாலைகளில் தண்ணீர் ஆறு போல் ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் பத்தாயிரம் ஏக்கர் பயிர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் வாழை, நெல் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வெள்ளம் வடிந்த பின்னரே பயிர் சேதாரங்கள் பற்றிய முழு விவரம் தெரியவரும் என்றும் கூறப்பட்டு வருகிறது. பருவம் தவறி பெய்த அடைமழை காரணமாக ஏராளமான நெற்பயிர்கள் நாசமாகியுள்ளது.
திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜு, உதயகுமார் ,ராஜலட்சுமி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் பொருள் சேதம் மற்றும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.