தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இதில் ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சில கருத்துக்களை பேசினார். அதற்கு பதிலளித்து ஏசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக தவறான தகவல்களை தி.மு.க பரப்பி வருகிறது. ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஏற்கனவே அதிமுக அரசுதான் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. ஏழு பேர் விடுதலை தொடர்பான தீர்மானத்தை பேரவையிலும் அமைச்சரவையிலும் கொண்டு வந்ததும் அதிமுக அரசுதான்.
அதேசமயம், திமுக ஆட்சியின் போது நளினியின் கருணை மனுவை மட்டும் ஏற்று ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் எனவும், மற்றவர்களின் கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றுதான் திமுக ஆட்சியில் அமைச்சரவை விவாதித்து முடிவெடுத்தது. ஏழுபேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநரிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. இந்த விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார். இதற்கிடையில் தன்னை விடுவிக்க வேண்டும் என பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் ஆளுநர் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட பதில் மனுவில் எழுபேர் விடுதலை தொடர்பான முடிவை குடியரசு தலைவர்தான் எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.