ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வருவதாக அறிவிப்பார். அதிரடியாக கட்சித் தொடங்கி தமிழக முதல்வராகவும் அமர்வார் என ரஜினி மக்கள் மன்ற மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குமரிமாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘’சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் என்றும் மன்னராக இருக்கிறார். ஒரே சூரியன், ஒரே சந்திரன் என்பதுபோல் தமிழகத்தின் ஒரே சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி தான். கருப்பு வெள்ளை காலத்தில் தொடங்கிய அவரது கலைப்பயணம், கலர் பட காலத்துக்குள் நுழைந்து, 2 டி தொழில்நுட்பத்தில் எந்திரன், அனிமேஷன் காட்சியாக கோச்சடையான் என அற்புதங்களை நிகழ்த்தியவர். இத்தனை நீண்ட கலையனுபவம் இந்தியாவில் வேறு எந்த நடிகருக்குமே வாய்த்தது இல்லை.
ரஜினிகாந்தின் ஆரம்ப காலக்கட்டம் முதல் அவரது தீவிர ரசிகனாக நானும், கோடிக்கணக்கான ரசிகக் கண்மணிகளும் இருக்கிறோம். ஆனால் நாங்கள் யாரும் அவர் முதல்வராக வேண்டும் என்றோ, கட்சி தொடங்குவார் நாமும் எம்.எல்.ஏ, எம்.பியாகிவிடலாம் என்றோ அவருக்கு ரசிகர் ஆனவர்கள் கிடையாது. அவரை சகோதரனாக, இன்னும் சொல்லப் போனால் கலைத்தாயின் தலைமகனை எங்கள் வீட்டின் மூத்த அண்ணனாகவே அவரது ரசிகர்கள் பார்த்துவருகிறோம். அதனால் தான் எப்போதும் அவரை பின் தொடரும் நிழலாகச் செல்கிறோம்.
திரையில் ரஜினியைப் பார்த்ததும் விசிலடிக்கும் ரசிகர்களாக மட்டுமல்லாது, தலைவரின் எண்ணப்படியே எங்களால் இயன்ற சேவைகளையும் கடந்த முப்பது ஆண்டுகளாகச் செய்து வருகிறோம். திராவிட, தேசிய கட்சிகளில் பொறுப்பில் இருப்பதைவிட தலைவர் ரஜினிகாந்தின் ரசிகன் எனச் சொல்வதில் பெருமைப்பட்டுக் கொள்ளும் மனநிலையில் இருப்பவர்களே நாங்கள். தமிழகம் இப்போது பாழ்பட்டுக் கிடக்கிறது. திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டு ஊழல் செய்தார்களே தவிர தமிழகத்துக்கு விமோச்சனம் கிடைக்கவில்லை. இன்றும் இலவசப் பொருள்களுக்கு கையேந்தும் நிலைக்கு தமிழினம் நிற்பது அவமானத்தின் குறியீடு!
அதனால் தான் இங்கே சிஸ்டம் சரியில்லை என்றார் தலைவர் ரஜினிகாந்த். மாற்றம் வேண்டும் என்னும் நம்பிக்கையில் தான் அவர் பின்னால் திரண்டோம். 2017 ஆம் ஆண்டு தலைவர் ர்ஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் எனச் சொன்னபோது நான் உள்பட ரசிகர்கள் பலரும் பெருமகிழ்ச்சி அடைந்தோம். கடந்த டிசம்பர் மாத இறுதியில் தலைவர் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரஜினியை விட்டால் தமிழகத்தை மீட்க யாரும் இல்லை என தமிழக மக்களே பேசத் துவங்கிய நேரத்தில்தான் தலைவர் இந்த முடிவை எடுத்திருந்தார்.
நானும் கூட இந்த முடிவால் கடும் அதிர்ச்சியடைந்தேன். தலைவர் ரஜினிகாந்த் பெயரில் கட்சி தொடங்குவதாக அறிவிப்பும் செய்து இருந்தேன். அந்த அறிவிப்பைப் பார்த்துவிட்டு தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான ரஜினி ரசிகர்கள் தொடர்ந்து என்னை தொடர்புகொண்டே இருந்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் கிளை கழகங்கள் அமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தேன். இம்மாத இறுதிக்குள் தலைவர் ரஜினியின் பெயரிலேயே கட்சி தொடங்கி, பேரறிஞர் அண்ணா, திமுகவைத் தொடங்கிய போது தலைவர் பதவியை தந்தை பெரியாருக்கு விட்டுவைத்தது போல விட்டுவைக்க நினைத்தோம். தலைவர் மனம் மாறும்போது இந்த பதவியில் வந்து எங்களை வழிநடத்தட்டும் என்பதுதான் நோக்கமாக இருந்தது.
ஆனால் இப்போது தலைமையில் இருந்தே நேரடியாக என்னைத் தொடர்புகொண்டு பேசினார்கள். தலைவர் மீண்டும் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனையில் இருப்பதாகவும், விரைவில் நல்ல முடிவு எடுப்பார் எனவும் கூறியிருக்கிறார்கள். தலைவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக சொல்லும் நாள் தான் உண்மையில் தமிழக மக்களின் திருநாள். அந்த நாளுக்காக காத்திருக்கிறேன். அதனால் புதிய கட்சித் தொடங்கும் பணியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு தலைவர் ரஜினிகாந்தின் வருகைக்காக காத்திருக்கிறேன். தலைவர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வருவதாக அறிவிப்பார். அந்த அறிவிப்பு தமிழ் மக்களுக்கு பெருமகிழ்ச்சியைத் தரும்.
அவருக்காக உழைப்பதையும், அவ்ர் அரியணையில் அமர்ந்து தமிழர் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றுவதையும் கண் குளிர பார்க்க வேண்டும் என்பதே ஒவ்வொரு ரசிகனின்…ஏன் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.’’என அதில் கூறப்பட்டுள்ளது.