மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். குடியரசு தினத்தன்று ஏற்பட்ட கலவரத்திற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. செங்கோட்டையில் நடந்த சம்பவமும், தேசியக் கொடிக்கு நிகழ்த்தப்பட்ட அவமதிப்பும், குடியரசுக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் ஏதிரானது.
பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி மரியாதை செலுத்திய அதே இடத்தில் தேசியக் கொடி அவமதிக்கப்பட்டுள்ள சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதே வேளையில் விவசாயிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர்களை கைது செய்வதை கைவிட வேண்டும். டில்லி கலவரம் குறித்து விசாரிக்க குழு அமைக்க வேண்டும். இதில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா சார்பாக சர்வதேச அளவில் பிரதிநிதியாக முன்னிறுத்தப்படும் ஒரு நபர் எவ்வாறு தேசதுரோகியாக இருக்க முடியும். மக்களால் தேர்வு செய்யபட்ட ஒரு எம்.பி எவ்வாறு தேசத்துரோகி ஆக முடியும். அவர் தேசத்துரோகி என்றால் நாம் அனைவரும் தேசத்துரோகிதான்” என்றார்.