தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “சசிகலா முழுமையாக குணமடைந்து வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் பெங்களூரில் அ.தி.மு.க கொடி கட்டிய காரில் சென்றது உள்கட்சி பிரச்னை. அது பற்றி நான் கருத்து சொல்ல முடியாது. அவர் அ.தி.மு.க-வுக்கு மீண்டும் வந்தாலும், வராவிட்டாலும் ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை. வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய தோல்வியைச் சந்திப்பது உறுதி. வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டில்லியில் விவசாயிகள் தொடர்ந்து சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பத்து முறைக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகளின் ஒரு கோரிக்கை கூட ஏற்கப்படவில்லை.
அதற்கு மாறாக விவசாயிகள் மீது மத்திய அரசு அடக்குமுறையை ஏவியுள்ளது. இது ஜனநாயக நாடாகத் தெரியவில்லை. இந்த நிலைமை நீடித்தால் விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டத்தில் இறங்கும் சூழ்நிலை உருவாகும். திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை சீட் என்பதை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்யும். ராகுல்காந்தி வருகைக்குப் பிறகு தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டிருப்பதைக் காண முடிகிறது. அவர் மீண்டும் பிப்ரவரி 15-ம் தேதிக்கு பிறகு தமிழகம் வர உள்ளார். காங்கிரசுக்கு மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது. எனவே அதற்கு ஏற்றா வகையில் தொகுதிகளின் எண்ணிக்கையும் அமையும்” என்றார்.