அமமுக சார்பில் ஏற்கனவே முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில் இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் இப்போது ஆர்.கே.நகர் தொகுதியில் எம்.எல்.ஏவாக இருக்கும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டியில் போட்டியிடுகிறார். இதனால் தேர்தல் களம் மிகவும் சூடுபிடித்துள்ளது.
கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் இப்போது செய்தித்துறை அமைச்சராக இருக்கும் கடம்பூர் ராஜ் போட்டியிடுகிறார். இதேபகுதியில் அமமுக மிகவும் வலுவாக உள்ளது. இந்தத் தொகுதியில் கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஒன்றியங்கள் வருகின்றன. இதில் கயத்தாறில் அமமுகவின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் மாணிக்கராஜா தான் யூனியன் சேர்மனாக இருக்கிறார். இதனால் இங்கே அமமுக வலுவாக இருக்கிறது. இதேபோல் இந்த தொகுதியில் கடம்பூர் ராஜூவின் சொந்த சமூகமான நாயக்கர்கள் வாக்குகள் அதிகம். அதேநேரம் கடந்த தேர்தலில் இதேதொகுதியில் திமுக தேவர் சமூகத்தை நிறுத்தியது. அப்போதே வெறும் 428 வாக்குகள் வித்தியாசத்தில் தான் ஜெயித்தார் கடம்பூரார். கோவில்பட்டியை பொறுத்தவரை நாயக்கர், தேவர் சமூக வாக்குகள் சரிக்கு சமமாக உள்ளது. அமமுக் அந்த பகுதிவாசிகள் மத்தியில் தேவர் கட்சி என்னும் இமேஜை ஏற்றியுள்ளது, இதனால் அதிமுகவுக்கு வழக்கமான தேவர் சமூக வாக்குகள் கிடைப்பதில் சிக்கல் உருவாகும். அதை அப்படியே தினகரன் டேக் ஓவர் செய்யும் வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே அமமுகவால் மிரண்டு போயிருந்த கடம்பூர் ராஜ்க்கு டிடிவியின் அறிவிப்பு இன்னும் சிக்கலை ஏற்படுத்தும்.
டிடிவி தினகரை இந்தத் தொகுதிக்குள் அழைத்து வந்தது மாணிக்கராஜா தான். இதே மாணிக்கராஜா தான் கடந்த தேர்தலில் கடம்பூர் ராஜூவின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.சில கிராமங்களுக்குள்ளேயே முந்தைய அதிருதியில் செல்ல முடியாத சூழலில் இருந்தார் கடம்பூரார். அதையெல்லாம் சமாளித்து வெற்றி பெற உதவியதே மாணிக்க ராஜா தான். இப்போது அவரது பலத்தை இந்தத் தேர்தலில் காட்டும் வாய்ப்பாகவும் இதைப் பார்க்கிறார். கடம்பூர் ராஜ்க்கு கடும் நெருக்கடியை டிடிவி கொடுப்பார் என்பதே முதல் சுற்று நிலவரம். ..