கொரோனா நோய்த்தொற்று பரவி வருவதன் காரணமாக காணும் பொங்கல் அன்று கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தமிழக அரசு ஏற்கனவே தடை விதித்திருந்தது. இந்த நிலையில் மேலும் இரண்டு நாட்கள் பூங்காக்கள் மற்றும் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூடுவதற்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தமிழக அரசு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கொரோனா நோய் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில் காணும் பொங்கல் அன்று கடற்கரைகளில் அதிகமான பொதுமக்கள் கூடுவதால் கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. எனவே மெரினா கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரைகள், வண்டலூர் உயிரியியல் பூங்கா, மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள கிண்டி தேசிய பூங்கா உள்ளிட்டவைகளில் வரும் 15, 16 மற்றும் 17-ம் தேதிகளில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது