மணப்பாறை அருகே கல்லூரி மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் என் சாவுக்கு காரணமானவனை விட்டுடாதீங்க என உருக்கமாக எழுதியுள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வேம்பனூர் காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் .இவருக்கு 17 வயதில் ஒரு மகள் இருக்கிறார். புதுக்கோட்டையில் உள்ள அரசு கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தநிலையில் அவர் திடீரென வீட்டில் இருந்து மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் இதுகுறித்து வளநாடு காவல் நிலையத்தில் ஆறுமுகம் புகார் தெரிவித்தார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த முத்து என்பவருடைய தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே செல்போனும், ஒரு கடிதமும் கிடைத்துள்ளது. அதில் மாணவி தனது சாவுக்கு காரணம் என்னுடைய மொபைலில் பிரியா என பதிவு செய்துள்ள நம்பர் தான். அது பெண் அல்ல ஆண். அவனை மட்டும் விட்டுவிடாதீர்கள். அனை மட்டும் உயிரோடு விட்டால் என்னை போல் பல பெண்கள் இறந்து விடுவார்கள் என்றும் அதில் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது மொபைல் நம்பர், பாஸ்வேர்ட் என்னையும் எழுதி வைத்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இலுப்பூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வளநாடு போலீசார் மாணவி எழுதிய கடிதத்தை யும் மொபைல் போனையும் கைப்பற்றி அவர் கூறியுள்ள நபரை குறித்து விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர்.