கடந்த ஆண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வரத் தடையும் விதிக்கப்பட்டது. அத்தியாவசியப் பயணத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் என அனைத்தும் முடங்கின.

பின்னர் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது என நமது மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சகமானது வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படக் கூடியவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தாலும், உலக அளவில் ஏற்படும் பாதிப்பு மற்றும் இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள உருமாறிய கொரோனாவை கருத்தில் கொண்டு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளோடு எச்சரிக்கையாக இருப்பது அவசியம். மேலும், கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் கொரோனா தொற்றின் இயல்பு நிலையைப் பொறுத்து தேவைப்பட்டால் மத்திய அரசு அனுமதி பெற்று இரவு நேர ஊரடங்கு போன்றவற்றை அமல்படுத்தலாம் எனவும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.