ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அமைப்பு உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் அணிக்கான பொறுப்பை ஏற்றெடுத்துள்ளது. ராமர் கோவில் கட்டுவதற்காக நாடு முழுவதும் மக்களிடம் நிதி திரட்டப்பட்டு வருகிறது. மதுரையில் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் வி.ஹெச்.பி மாநில அமைப்பாளர் சேதுராமன் தலைமையில் நடந்தது.
இதில் கலந்துகொண்ட விஸ்வ ஹிந்து பரிஷத் அகில உலக பொது செயலர் மிலிந்த் ப்ராண்டே கூறுகையில், “அரசியலுக்கு அப்பாற்பட்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, பலரும் தங்களால் இயன்ற அளவு நிதி உதவி செய்து வருகின்றனர். நம் நாட்டின் 5.25 லட்சம் கிராமங்களுக்கும் செல்ல உள்ளோம். ராமர் கோயில் கட்ட 13 கோடி மக்களிடம் நிதி பெறப்படும். தமிழகத்தில் 13000 கிராமங்களில் 60 லட்சம் பேரை சந்தித்து நிதி திரட்ட உள்ளோம். அயோத்தியில் ராமர் கோவில் பிங்க் கிரானைட்டில் கட்டப்படும். இரும்பு, சிமென்ட் பயன்படுத்தாமல் பழமையான பாரம்பரிய மற்றும் தற்போதைய நவீன தொழில்நுட்பத்துடன் ராமர் கோவில் அமைக்கப்பட உள்ளது. ஆன்மிகத்தையும், கலாச்சாரத்தையும் பறைசாற்றுவதாகவும், அன்பின் அடையாளமாகவும் ராமர் கோவில் அமையும். ஜனவரி மாதம் 14-ம் தேதி தொடங்கிய நிதி திரட்டும் பணி பிப்ரவரி மாதம் 27-ம் தேதி நிறைவுபெறும். கோவில் பணிகள் எப்போது முடியும் என இப்போது கூற இயலாது. அரசியலுக்கு அப்பாறட்டு அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் ராமர் கோவில் அமையும்” என்றார்.