ஆண்டுக்கு 1000 பாகிஸ்தானிய சிறுமிகள் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுகின்றனர் என ஒரு ஆய்வில் தெரியவந்திருப்பது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நேகாவுக்கு அவளது தேவாலயத்தில் பாடப்படும் பாடல்களை கேட்பது மிகவும் பிடித்தமானது. ஆனால் அவற்றை பாடும் வாய்ப்பை அவள் தனது 14 ஆவது வயதில் இழந்துவிட்டாள். கடந்த வருடம் அவளுக்கு 14 வயதான போது அவள் தன்னுடைய கிருஸ்துவ மதத்திலிருந்து முஸ்லிம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு 45 வயதான ஒருவருக்கு மனமுடித்து வைக்கப்பட்டாள். இதில் கொடுமை என்னவென்றால் நேகாவின் கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி நேகாவை விட இரண்டு மடங்கு வயதான குழந்தைகளும் உள்ளனர். கற்பழிப்பு மற்றும் பாலிய விவாகம் ஆகிய குற்றத்துக்காக இப்போது நேகாவின் கணவர் சிறையில் உள்ளார்.
இது போன்ற சிறுமிகளை பேட்டி எடுத்து அசோசியேட் பிரஸ் (AP) நிறுவனம் சமீபத்தில் விரிவான ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.
நேகா 1,000 ல் ஒருத்தி. இதுபோல வருடத்துக்கு 1000 மத சிறுபான்மையினரின் பெண் குழந்தைகள் பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுகின்றனர். இந்த கரோனா கால ஊரடங்கு காலகட்டத்தில் இது போன்ற கட்டாய மதமாற்றம் மற்றும் பாலிய விவாகங்களின் எண்ணிக்கை பாகிஸ்தானில் கணிசமாக அதிகரித்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளதாக, அதில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் மத சுதந்திரம் கடுமையாக மீறப்படுவதாக சமீபத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அண்மையில் எச்சரித்திருந்தது. பாகிஸ்தானில் இது போல 1000 இந்து, கிருஸ்துவ மற்றும் சீக்கிய பெண் குழ்ந்தைகள் ஆண்டு தோறும் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு இஸ்லாமிய மதத்தை சேர்ந்த வயதானவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் கொடுமை நடந்து வருவதாகவும் அந்த கட்டுரையில் கூறியுள்ளது.